தமிழ் சினிமாவின் சகாப்தம் மறைந்த இயக்குநர் மகேந்திரனுக்கு இசையமைப்பாளர் இளையராஜா, இயக்குநர் இமயம் பாரதிராஜா, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஆகியோர் நேரில் சென்று கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். மகேந்திரனின் உடலுக்கு மலர் வளையம் வைத்தபோது ராஜாவின் கரங்கள் நடுங்கின. பாரதிராஜா கதறி அழுதார். ரஜினி கண் கலங்கி மகேந்திரன் உடல் அருகே நீண்ட நேரம் நின்றபடியே இருந்தார்.
பல நூற்றுக்கணக்கான இயக்குநர்களுக்கு இசையமைத்திருந்தாலும் இளையராஜாவின் மனதுக்கு மிகவும் நெருக்கமான இயக்குநர் என்றால் அது எப்போதும் இயக்குநர் மகேந்திரன் தான். இவரது ‘முள்ளும் மலரும்’ படத்தைப் பின்னணி இசையில்லாமல் பார்த்த தயாரிப்பாளர் ‘என்னை இப்படி நடுத்தெருவுல கொண்டு வந்து நிறுத்திட்டேயே’என்று மகேந்திரனிடம் புலம்பியதும் படம் பின்னணி இசையுடன் தயாராகி சூப்பர் ஹிட் ஆனவுடன் பிளாங்க் செக்கை அவரே கொண்டு வந்துகொடுத்ததும் ஊர் உலகமறிந்த கதை.
