கிழக்கில் வரலாற்றுப் பிரசித்தி பெற்ற பாண்டிருப்பு திரௌபதை அம்மன் ஆலய வருடாந்த உற்சவம் இவ் வருடம் இடம்பெற மாட்டாது என கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக ஆலய நிர்வாக சபையினர் தெரிவித்துள்ளனர்.
இற்றைக்கு ஐந்நூறு வருடங்களுக்கு முற்பட்ட பாண்டிருப்பு திரௌபதை அம்மன் ஆலய வுருடாந்த உற்சவம் மகாபாரத இதிகாசக் கதையினை மையமாகக் கொண்டு 18 தினங்கள் நடைபெறுவது வழங்கமாகும்.
ஓவ்வொரு வருடமும் புரட்டாதி மாதத்தில் திரௌபதை அம்மன் ஆலய வுருடாந்த உற்சவம் ஆரம்பமாகி நடைபெற்றுவருகின்றன. தற்போதைய கொரோனா தொற்றுக் காரணமாக இவ் ஆயல உற்சவத்தினை நடத்தமுடியாத சூழ் நிலையுள்ளது. இது தொடர்பாக ஆராயும் கலந்துரையாடல் கூட்டம் கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் பிரதேச செயலாளர் ரி.ஜே.அதிசயராஜ் தலைமையில் நடைபெற்றது. இதில் அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் வி.ஜெகதீசன், கல்முனை வடக்கு பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரி டொக்டர் ஆர்.கணேஸ்வரன், கலாசார உத்தியோகத்தர் ரி.பிரபாகரன் மற்றும் ஆலய நிர்வாக சபையினர் கலந்து கொண்டிருந்தனர்.
கல்முனை பிரதேசத்தில் அதிகரித்துச் செல்லும் கொரோனா தொற்றுக்காரணமாக இவ் வருடம் திரௌபதை அம்மன் ஆலய உற்சவத்தினை விமர்சையாக நடத்த முடியாத சூழ் நிலை நிலவுகின்றது. இதன் காரணமாக ஆலய உற்சவத்தினை நடத்தாமல் இருப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை ஆலய திருக்கதவினை திறக்காது பத்து பேருடன் சம்பிரதாய பூர்வமாக ஆலய உள் மண்டபத்தில் மடைவைத்து ஒரு நேர பூசை செய்வதற்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
(படமும் தகவலும் செ.துஜியந்தன்)
